Sri Somasundara Stuti - Sloka 5
॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥
॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥
|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||
देवदेवं यमाराध्य मृकण्डुतनयो मुनिः ।
नित्यत्वमगमत्सद्यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ ५ ॥
தே³வதே³வம்ʼ யமாராத்⁴ய ம்ருʼகண்டு³தனயோ முனி꞉ ।
நித்யத்வமக³மத்ஸத்³யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 5 ॥
devadevaṃ yamārādhya mṛkaṇḍutanayo muniḥ ।
nityatvamagamatsadyastaṃ vande somasundaram ॥ 5 ॥
यं देवदेवं - யம்ʼ தே³வதே³வம்ʼ - எந்த தேவதேவரை
आराध्य - ஆராத்⁴ய - ஆராதித்து
मृकण्डु-तनयः मुनिः - ம்ருʼகண்டு³-தனய꞉ முனி꞉ - மிருகண்டுவினுடைய புதல்வரான முனிவர் ( மார்க்கண்டேய முனிவர் )
सद्यः नित्यत्वम् अगमत् - ஸத்³ய꞉ நித்யத்வம் அக³மத் - உடன் நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ,
तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
எந்த தேவதேவரை ஆராதித்து,
மிருகண்டுவினுடைய புதல்வரான மார்க்கண்டேய முனிவர், ஆங்கு அப்பொழுதே நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 5
Meaning :
I adore that Somasundarar, after worshiping Whom, Rishi Markandeya, son of Rishi Mrkandu on the spot attained eternity. 5
# நிலைப்புத்தன்மை - மூப்படையாமலும், மரணம் ஏற்படாமலும் ஆரோக்கியமாக இருக்கும் தன்மை.
ரிஷி மார்க்கண்டேயர் :
தவத்தின் மேன்மையை விளங்கச் செய்யும் அநேக தவசீலர்கள் நம் பாரத மண்ணில் தோன்றியுள்ளனர். அவர்களுள் ஒருவர் மிருகண்டு முனிவர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் மிருகங்கள் இவரது உடலில் அரிப்பு தீர உரசிக்கொள்ளுமாம். இதனால் மிருகண்டு என்ற பெயர் ஏற்பட்டது. மிருகசிருங்கர் - சுவிருத்தா முனி தம்பதிக்கு பிறந்தவர். மிருகண்டு முனிவர் சிறந்த சிவபக்தர், வேதவிற்பன்னர், தேஜஸ்வி. தக்க காலத்தில் அவருக்கு முத்கல முனிவரின் கன்னிகையான மருத்வதியுடன் விவாஹம் ஏற்பட்டது. இருவரும் ஆசார அனுஷ்டானங்கள் தவறாமல் வாழ்ந்து வந்தனர். புத்திரப்பேறு மட்டும் வாய்க்கவில்லை.
புத்திரப்பேறு வேண்டி காசிக்குச் சென்று பரமேச்வரரைக் குறித்து தவம் செய்தனர்.
தவத்திற்கு மெச்சி சிவபெருமான் தோன்றினார். முனி தம்பதியர் சங்கரனாரிடம் புத்திர வரம் வேண்ட, சங்கரனார் குணவானாக அல்லாத நீண்ட ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா அல்லது ஸகலகுணங்களுடன் கூடிய, ஸர்வஞனான பதினாறே ஆண்டுகள் ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா என்று கேட்டார். குறைந்த ஆயுளானாலும் நிறைந்த ஞானமுடைய பிள்ளையே வேண்டுமெனக் கேட்டார் முனிவர். இறைவனும் வரமளித்து மறைந்தார்.
பின் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மிருகண்டுவினுடைய புத்திரனானதால் மார்க்கண்டேயர் எனப் பெயர் பெற்றது. பதினாறு ஆண்டுகள் நன்றாகக் கழிந்தன. பதினாறாவது ஆண்டு முடியும் தருவாயில், மார்க்கண்டேயரை எண்ணி முனி தம்பதியர் கலக்கமுற்றனர். இதனை கவனித்த மார்க்கண்டேயர் விவரம் கேட்டறிந்தார். பின் தான் சிவக்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வதாகவும், விரதங்களையும். ஸ்தோத்திரங்களையும் அனுஷ்டித்து சிவபெருமான் பிரீதியடையும்படி செய்து வருவதாகவும் கூறிச் சென்றார்.
தன் ஆயுள் முடியும் தருவாயில், புராணங்களின் படி காசி க்ஷேத்திரம் என்றும், தலபுராணத்தின்படி திருக்கடவூர் வந்து சேர்ந்ததாகவும் சொல்வர்.
உயிரை எடுத்துச் செல்ல யம கிங்கரர்கள் வந்த போது மார்க்கண்டேயர் வர மறுத்துவிட்டார். அவரது தேஜஸின் முன் அவர்களால் ஏதும் செய்ய முடியாமல் போகவே திரும்பி யமனிடம் சென்று கூறினர்.
யமனும் மார்க்கண்டேயரிடம் வந்தார். அப்போதும் மார்க்கண்டேயர் வர மறுத்து தான் செய்யும் ஸ்தோத்திர படனத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று வேண்டினார்.
இதைக் கேட்ட யமன் சரீரத்தின் நிலையற்ற தன்மையையும் , ஒவ்வொரு ஜீவனும் தன் கர்மத்திற்கு அனுசரித்து மரணம் எய்தும் என்பதையும், உரிய காலத்திற்கு முன் ஜீவன் போகாது, காலம் வந்தபோது ஜீவன் நில்லாது என்றும், தானும் ஈச்வர ஆஞ்ஞைப்படியே தன் கடமையை செய்வதாகவும், இவையெல்லாம் நீ அறியாயோ என்று கூறினார்.
மார்க்கண்டேயர் கூறினார், எவ்வாறு குடிமக்களை ஆளுவது அரசனோ, அவ்வாறு சிவபக்தாளை ஆளுவது அந்த பரமேச்வரரே. பக்தர்களிடம் உனது ஆணை செல்லுபடியாகாது. சிவாயநம என்றிருக்கும் பக்தர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பதையெல்லாம் தாங்கள் அறியமாட்டீர்களோ.
இதனால் கோபமுற்ற யமன் தன் பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயரும் சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார்.
பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் படர, அதை யமன் இழுத்தபோது, பரமேச்வரர் தோன்றி, தன் இடது திருவடியால் யமனை உதைக்க, அவன் தூதரே சென்று விழுந்து மாண்டான். மார்க்கண்டேயருக்கு 'என்றும் பதினாறு' எனும்படி அனுக்கிரகம் செய்தார், பரமேச்வரர்.
அந்த பரமேச்வரரே மதுரையில் சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.