16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 12
॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥
|| ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥
12. गजाननः - க³ஜானன: - GAJĀNANAḤ :-
अन प्राणन इत्यस्माद्धातोर्णिचि ततो ल्युटि ।
गजाननयतीत्यर्थे साधुरेष गजाननः ॥
गजा सत्वमयी माया तस्याः सत्ताप्रदानतः ।
अननात्प्राणदो देवो गजानन महेश्वरः ॥
गकारः सर्वगं ब्रह्म गजानन इति स्मृतम् ।
गजस्य वक्त्रसंयुक्तः शिवपुत्रो गजाननः ॥
அன ப்ராணன இத்யஸ்மாத்³தா⁴தோர்ணிசி ததோ ல்யுடி |
க³ஜானனயதீத்யர்தே² ஸாது⁴ரேஷ க³ஜானன: ||
க³ஜா ஸத்வமயீ மாயா தஸ்யா: ஸத்தாப்ரதா³னத: |
அனனாத்ப்ராணதோ³ தே³வோ க³ஜானன மஹேஶ்வர: ||
க³கார: ஸர்வக³ம்ʼ ப்³ரஹ்ம க³ஜானன இதி ஸ்ம்ருʼதம் |
க³ஜஸ்ய வக்த்ரஸம்ʼயுக்த: ஶிவபுத்ரோ க³ஜானன: ||
யானை முகம் கொண்டவர். யானைகளை வாழ்விப்பவர். யானைமுகம் கொண்டமையால் யானைகளிடம் பற்றுள்ளவர்.
கஜானனர் : யானையின் சிறப்புக்கள் : ( தெய்வத்தின் குரல் )
தூமகேதுர்-கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந:
கஜானனர் என்பது அடுத்த பெயர். யானை முகர் என்று அர்த்தம். “கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே!” என்று ஒளவையார் கூப்பிட்ட கரிமுகர்.
ஆனைக்கு ஏகப்பட்ட சிறப்புக்கள். சரீர பலம்; புத்தி பலம்; குறிப்பாக நல்ல நினைவுக் கூர்மை; ஞானம்; தன்னுடைய பெரிய பலத்தினால் ஒரு தொகை தொகைத்தால் [துவை துவைத்தால்] சட்டினியாகப் போகிற மனிதனிடம் எளிமையாக அடங்கி அவன் பழக்குகிறபடி லோகோபகாரமாக பெரிய பெரிய மரங்களைத் தூக்கி வருவது, யுத்தத்தில் எதிரிப்படையை அழிப்பது, கோட்டை வாசலை மோதி உடைப்பது என்றிப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற பண்பு; ஸத்வ ஆஹாரமாகத் தாவரங்களைத்தான் புஜிக்கிறது; தான் செத்தாலும் அழியாத தந்தத்தால் ‘இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற கீர்த்தி பெற்றிருப்பது – என்றிப்படி யானைக்கு உள்ள சிறப்புக்கள் எண்ணி முடியாது.
கையின் ஸ்தானத்தில் தும்பிக்கை என்ற விசேஷ அங்கத்தைப் பெற்றுள்ள மிருகம் அது ஒன்றுதான். வேறே எந்த மிருகமாவது ஸ்வாமிக்கு யானை சாமரம் போடுகிற மாதிரிப் போட முடியுமா? தும்பிக்கையைத் தூக்கி ஸலாம்தான் போட முடியுமா?
மற்ற மிருகங்கள் ஒருத்தரை முட்டித் தள்ளத்தான் முடியும்; தன் மேல் ஏற்றி வைத்துக் கொள்ள முடியாது. யானைதான் தும்பிக்கையால் அன்போடு அணைத்து ஒருத்தரைத் தனக்கு மேல் உசந்த ஸ்தானம் கொடுத்து ஏற்றி வைத்துக் கொள்ள முடியும். மஹா பலம், மஹா காயம் படைத்த அது இப்படி இருப்பது மிகவும் விசேஷம். போகிற வழியில் ஒருத்தர் குறுக்கே நின்றாலும் மோதித் தள்ளுவது தவிர வேறு வழியில்லை என்று இல்லாதது யானையே. அவரைத் தும்பிக்கையால் வளைத்தெடுத்து ஹிதமாக ஓரத்தில் போட்டுவிட்டு அது போகும்.
அதற்கு ‘த்விபம்’ என்று ஒரு பெயர். த்வி-பம் என்றால் இரண்டு தரம் குடிப்பது, சாப்பிடுவது என்று அர்த்தம். யானை எப்படி த்விபம்? முதலில் தும்பிக்கை நுனியால் ஜலத்தையோ, மற்ற தீனியையோ எடுக்கிறது. அப்புறம் அதை வாய்க்குள் செலுத்திக் கொள்கிறது. மிருக புத்திப்படி தீனி என்றால் நேரே வாயால் விழுந்து பிடுங்காமல், இரண்டு ஸ்டேஜில் மனிதர்கள் கையால் எடுத்து வாயில் போட்டுக் கொள்வது போல் அது செய்வதாலேயே த்விபம். ஆனால் உமிழ்கிறபோதோ த்ருட பதார்த்தமானால் வாயால் மட்டுமே உமிழும். ஜலமானால் தும்பிக்கை நுனியால் மட்டும் ஃபௌண்டன் மாதிரிப் பீய்ச்சியடிக்கும். இதில் ஒரு பெரிய தத்வமே இருக்கிறது. நாம் ஒன்றை எடுத்துக் கொள்வதானால் ஒரு தரத்துக்கு இரண்டு தரம் ஆய்தோய்ந்து பார்த்தே ஏற்க வேண்டும்; ஆனால் தள்ள வேண்டியதை ஒரே மூச்சில் இஷ்கா பிஷ்கா இல்லாமல் தள்ள வேண்டும் என்ற பெரிய தத்வத்தை யானை த்விபமாக இருந்து காட்டுகிறது.
ஆச்சர்யமாக ஒரு விஷயம் ஒருத்தர் எழுதியிருக்கிறார். இந்த நாளில் இல்லாத கருவிகளே இல்லை. ஆனாலும் இத்தனூண்டு ஊசியையும் கொந்தி எடுக்கக் கூடியதாகவும் எத்தனாம் பெரிய தேக்கு மர Beam-ஐயும் வளைத்துச் சுருட்டித் தூக்கக் கூடியதாகவும் இருக்கும் ஒரே கருவி உண்டா என்றால் இல்லை. பகவான் ஸ்ருஷ்டித்த யானையின் தும்பிச்சுகைதான் இரண்டையம் பண்ணுகிறது! சின்னது, பெரிசு எல்லாவற்றையும் நிர்வஹிக்கக் கூடியவர் பிள்ளையார் என்பதால்தான் அவர் கஜமுகராக இருக்கிறாரென்று அவர் எழுதியிருக்கிறார்.
லோகத்தையே எட்டு திசைகளிலும் எட்டு யானைகள்தான் முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன. அஷ்ட- திக் – கஜங்கள் என்பார்கள். இது பௌதிக பலம். புத்தி பலத்துக்கும் அஷ்ட – திக் – கஜங்கள் தான். ‘எண் பேராயம்’ என்று ராஜாங்க நிர்வாகத்திற்கு எட்டு statesmen-ஐ, ராஜதந்திர நிபுணர்களை வைத்துக் கொள்வதுபோல், சில ராஜாக்கள் எட்டு மஹா வித்வான்களைக் கொண்ட வித்வத் ஸதஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். க்ருஷ்ணதேவராயர் அப்படி வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலுள்ள எட்டு மேதைகளை அஷ்ட திக் கஜம் என்றே சொல்வது வழக்கம்.
எல்லாவற்றுக்கும் மேல் அழகு, காம்பீர்யம் வாய்ந்த அழகு. ‘கஜகதி’ என்று அதன் நடை விசேஷித்துச் சொல்லப் படுகிறது. ஆண்மை, பெண்மை இரண்டும் அதிசயமாகக் கலந்தது கஜகதி. அதனால்தான் காம்பீர்ய புருஷர்களின் நடையை அதற்கு ஒப்பிட்டு வர்ணிப்பது மட்டுமில்லாமல் உத்தம ஸ்த்ரீகளின் நடையழகையும் அப்படியே சொல்லி, அவர்களை “கஜகாமினி” என்பது.
தான் அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பது மாத்திரமில்லை. தனக்கு மேல் ஒருவன் உட்கார்ந்தால் அவனுக்கும் ஒரு புது சோபையை ஊட்டி விடுவதாக யானையின் கம்பீர ஸெளந்தர்யம் இருக்கிறது. அதனால்தான் யானை மேல் அம்பாரி வைத்து ஒருத்தரை ஊர்வலம் விடுவது. ஸ்வதாவாகவே கம்பீர அழகு கொண்ட ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியைக்கூட ராஜாவாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட மந்த்ரி ப்ரதானிகளும் குடிபடைகளும் தசரதரிடம் குறிப்பாக, “கஜேந மஹதா யாந்தம்” என்று, அதாவது “யானை மேல் அவர் பவனி வரும் காட்சியைப் பார்க்க விரும்புகிறோம்” என்று சொன்னதாக ராமாயணத்திலிருக்கிறது.* ஆனைமேல் பவனி வருகிற ராமனுடைய முகத்திற்கு மேலே வெண்கொற்றக் குடை அழகாக கவிந்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறார்கள். “கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ராவ்ருதானனம்”. – நம்முடைய ஆனை ஸ்வாமிக்கோ சத்ர [குடை] உபசாரம் முக்யமாக இருக்கிறது. பிள்ளையாரோடேயே சேர்த்துக் குடையும் வாங்கி வந்துதான் பூஜை செய்கிறோம்!
கன்னங்கரேல் என்றிருக்கும் ஆனையின் பரந்த நெற்றியில் விபூதியோ, திருமண்ணோ பெரிசாகப் போட்டு விட்டால் எத்தனை அழகாயிருக்கிறது? அல்லது முகபடாம் பூட்டினால் எப்படியிருக்கிறது? ப்ராணி வர்க்கத்தில் வேறு எதற்காவது அப்படி உண்டா?
இன்னொன்று, முத்து. சிப்பயில் உண்டாவதாகவே நினைக்கிறோம். ஆனால் இன்னும் சில இடங்களிலும் அபூர்வமாக முத்து உண்டாகிறது. மூங்கிலுக்குள் முத்து விளைவதுண்டு. மிகவும் உத்தமமான முத்து எங்கே உண்டாகிறதென்றால் கஜ கும்பத்தில்தான். ஆனை மஸ்தகத்தில் [தலையில்] இரண்டு பக்கமும் அதன் காம்பீர்யத்தை மேலும் உயர்த்துவதாக புடைத்துக் கொண்டு முண்டுகள் இருக்கிற தல்லவா? அதற்குத்தான் கஜ கும்பம் என்று பெயர்.
இன்னொரு பெரிய சிறப்பு, தெய்விகமான சிறப்பு, யானையின் மஸ்தகம் மஹாலக்ஷ்மியின் வாஸ ஸ்தானமாயிருப்பது. தாமரைப் பூவின் உள்பக்கம், பில்வ இலையின் பின்பக்கம், ஸுமங்கலிகளின் வகிடு, பசுமாட்டின் பின்பக்கம், யானையின் மஸ்தகம் ஆகிய ஐந்தும் லக்ஷ்மி நித்ய வாஸம் செய்வதால் நித்யஸ்ரீயுடன் கூடிய மங்களமான இடங்கள்.
முன்னந்தலைக்கு இப்படிப் பெருமை இருக்கிறதென்றால் ஆனையின் பின்னால் தொங்கும் வாலின் மயிருக்கும் பெருமை இல்லாமலில்லை. அந்த ரோமம் ஆவி சேஷ்டைகளுக்குப் பெரிய ரக்ஷை. ஆரோக்ய ப்ரதமும் [ஆரோக்யமளிப்பதும்] அதனால் அதன் நறுக்கை மணி மாதிரி வைத்து மோதிரம் முதலிய நகைகள் செய்து போட்டுக் கொள்வதுண்டு. நகைக்கு நகை, ரக்ஷைக்கு ரக்ஷை! ஸாதாரணமாக ரோமமும் நகமும்தான் ரொம்பவும் தோஷமானவை. அவற்றை வைத்தே துர்மாந்த்ரிக ப்ரயோகம் பண்ணுவதுண்டு. ஒரு உடம்பிலுள்ளவரைதான் அவற்றுக்கு தோஷம் கிடையாது. உடம்பிலிருந்து ரோமம் உதிர்ந்தாலோ நகத்தை வெட்டி எடுத்தாலோ குப்பையில் தூரக்க [தொலைவில்] போட்டு விட வேண்டும். ஆனால் விதி விலக்காக யானையின் ரோமம் துர்மாந்திரிகத்திற்குப் பரிஹாரமாக இருக்கிறது. அதே போலத்தான் புலி நகமும். தஞ்சாவூர் கிருஷ்ணன் படத்தில் ஸ்வாமிகூட புலிநகம் கோத்த சங்கிலி போட்டுக் கொண்டிருப்பார்.
* வால்மீகி, அயோத்யா காண்டம், ஸர்கம் 2, ச்லோகம் 22
தெய்வத்தொடர்புள்ள விலங்கினம் :
மடத்தில் இரண்டு மிருகங்களின் பேரில் நித்யம் பூஜை நடக்கிறது. கோபூஜை, கஜபூஜை என்ற இரண்டு. இவற்றில் கோவை ம்ருகத்தோடு சேர்க்காமல் மாதா என்றே வைத்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் மிருக வர்க்கம் என்றே இருப்பதில் கஜபூஜை என்றுதான் நடக்கிறது. வேறே எந்த மிருகத்துக்கும் இந்த பூஜை விசேஷமில்லை. நாளைத் தொடங்கும்போது நடப்பது கோபூஜை. கோபூஜையில் ‘கோ’வுக்கு பூஜை நடக்கிறது. நாள்- அதாவது day-time , பகல்-முடிகிற ஸாயரக்ஷையில் நடப்பது கஜபூஜை. கஜபூஜையில் கஜத்தை மரியாதைப் பண்ணிப் பழங்கள் கொடுப்பதோடு அதைக் கொண்டு ஆசார்யாளுக்கு [ஆசார்ய பாதுகைகளுக்கு] சாமரம் போட்டுப் பூஜை பண்ண வைக்கிறோம்; தினப்படி வரவு- செலவுக் கணக்குகள் அப்போது அவர் முன்னே ஒப்பிக்கிறோம். அதை முடித்து நாம் நமஸ்காரம் பண்ணும்போது யானையும் தும்பிக்கையைத் தூக்கி அவருக்கு ஸலாம் போட்டுவிட்டு ஜயகோஷமாகப் பிளிருகிறது. இந்த பூஜைக்கே ‘தீவட்டி ஸலாம்’ என்றுதான் பேர் சொல்வது.
கோபூஜையில் கோவுக்குப் பூஜை என்பதோடு ஸரி. கஜ பூஜையில் அதற்கும் பூஜை, அதுவும் பூஜை பண்ணுகிறது.
எல்லாப் பெரிய கோவில்களிலும் ஆனை வைத்திருக்கிறார்கள். மலையாளத்தில், திருச்சூர் மாதிரி இடங்களில், ஆனைகள்தான் ஸ்வாமியைவிடக்கூட உத்ஸவங்களில் பிரதானமாக இருப்பது.
அவ்வளவு தெய்விகம் பொருந்திய, தெய்வ ஸம்பந்தமுள்ள மிருகம் அது. “ஆதிமூலமே!” என்று கூப்பிட்டு பகவானையே வைகுண்டத்திலிருந்து இறங்கிவரப் பண்ணியிருக்கிறதல்லவா?
மிருகங்களுக்குள் உருவத்தில் ரொம்பவும் பெரியது என்பதோடு யானைக்கே இப்படி ஏகப்பட்ட சிறப்புக்கள் இருப்பதால்தான், எல்லா ஜீவ வர்க்கங்களும் சேர்ந்ததாக விக்நேச்வரர் என்ற ரூபம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பரமாத்மா தீர்மானித்தபோது மிருக வர்க்கத்தில் யானையைத் தேர்ந்தெடுத்தார்.
அனைத்து உயிரினங்களும் இணைந்தவர் :
எல்லா ஜீவ வர்க்கமும் அவரிடம் சேர்ந்திருப்பது எப்படியென்றொல்: அவர் தேவ வர்க்கம் என்று சொல்லவே வேண்டாம்! தெய்வங்களில் பிரதமமாகப் பூஜிக்கப்படுபவரல்லவா? அநுக்ரஹ சக்தி என்பது கொஞ்சங்கூட வற்றிப் போகாமல் பக்தர்களுக்கு சாச்வதமாக க்ருபை பண்ணுவதுதான் தெய்வம் என்பதற்கு முக்யமான லக்ஷணம். இந்த லக்ஷணம் பிள்ளையாரிடம் பூர்ணமாயிருக்கிறது.
பூத வர்க்கமாகவும் இருக்கிறார். எப்படியென்றால் தொப்பை, கட்டை, குட்டைக்கால் ஆகியன பூத ரூபத்திற்கு உரியதுதான்.
மநுஷ்ய வர்க்கமென்று அவரை எப்படிச் சொல்வது? மநுஷ்யர்தான் பக்வம் பண்ணின ஆஹாரம். அதாவது வேக வைத்துச் சமைத்த ஆஹாரம் சாப்பிடுவது. மிருகங்கள் பச்சைத் தாவரம் அல்லது பச்சை மாமிஸமே உண்பவை. அஸுர, ராக்ஷஸர்களும் பச்சை மாமிஸம் சாப்பிடுபவர்களே. ‘க்ரவ்யாதர்’ என்பார்கள். க்ரவ்யம் என்றால் பச்சை மாமிஸம்.
தேவர்களுக்கு நாம் நைவேத்யம், ஆஹுதி என்று அநேக ஆஹார வகைகளைக் கொடுத்தாலும் அவர்கள் அதன் ஆவியை மட்டும்தான் புஜிப்பார்கள். ஸ்தூல பதார்த்தம் வெந்ததாகவே சாப்பிடுவது மனுஷ ஜாதிதான். விக்நேச்வரர் ஒருவர்தான் ஒரு தரத்துக்கு இரண்டு தரம் வெந்த மோதகத்தைப் புஜிப்பவர். முதலில் அரிசி மாவை வேகவைத்துக் கிளறிச் சொப்புப் பண்ணி அப்புறம் அதற்குள் பூர்ணம் வைத்து மூடி மறுபடி ஆவியில் வேக வைப்பதால் மோதகம் இரண்டு தரம் வெந்தது. அது மடி தப்பு என்று, ஸோமாசி மாதிரி நெய்யில் பொறித்த மோதகங்கூடப் பண்ணுவதுண்டு. மற்ற தேவர்களைப் போல் ஆஹுதி ரூபத்தில் அவருக்குக் கணபதி ஹோமத்தில் மோதகம் போடும் போது பொறித்ததாகத்தான் செய்வது வழக்கம். ஆஹுதியிலும் நாம் என்ன பண்டம் ஹோமம் செய்தாலும் ஆவி பாகத்தைத்தான் தேவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனாலும் நாம் கொடுக்கும் ஹோம வஸ்து இரண்டு தரம் வெந்ததாக இருக்கக்கூடாது என்று பொறித்த கொழுக்கட்டை போடுவது வழக்கம். ஹோமமாக இல்லாமல் பிள்ளையாரை ஒரு ரூபத்தில் வைத்துப் பூஜிக்கும்போதோ வெந்த கொழுக்கட்டைதான் யதேஷ்டமாக நைவேத்யம் செய்கிறோம். “மோதக ஹஸ்த” என்றே பேர் வாங்கியவராகக் கையிலேயே ஒரு சமைத்த பக்ஷணத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஸ்வாமி அவர்தான்! கிருஷ்ணர் வெண்ணையை வைத்துக் கொண்டு, வெண்ணைய்த் தாழியை கட்டிக் கொண்டு இருக்கிறார் என்றால் அவர் நர ரூபத்தில் நமக்கு நடுவில் அவதாரம் பண்ணியவர். அதுவுமில்லாமல் வெண்ணைய் சமைத்த பண்டமும் இல்லை. இப்படியே ஸுப்ரம்மண்யருக்கு நைவேத்யம் பண்ணும் தேனும் தினைமாவும் சமைத்த பதார்த்தங்களில்லை. அன்னபூர்ணேச்வரி கையிலே பாயஸான்னம் வைத்து இருக்கிறாளென்றாலும், அது அவள் புஜிப்பதற்காக இல்லை; நமக்குப் போடுவதற்காகத்தான். நமக்குப் போடுவதோடு தாமும் பக்வ போஜ்யம் சாப்பிடுவது விக்நேச்வரர் ஒருத்தர்தான்.
இப்படி தேவ வர்க்கம், பூத வர்க்கம், மநுஷ்ய வர்க்கம் மூன்றும் சேர்ந்ததோடு, மிருக வர்க்கத்தையும் தம்மிடம் சேர்த்துக் காட்டணுமென்று நினைத்தார். மநுஷ்ய வர்க்கம் என்றால் அதைச் சேர்ந்த எல்லாருக்கும் ஒரே உருவ அமைப்புதான் இருக்கிறது. அப்படியே, தேவர், பூதர் என்றாலும் அததிலும் அத்தனைப் பேருக்கும் பொதுவாக ஒரு ரூப அமைப்புதான் இருக்கிறது. ஆனால் மிருகம் என்று எடுத்துக் கொண்டால், அந்த ஒரு வர்க்கத்திலேயே எத்தனை ப்ராணி ராசிகள் வேறு வேறு உருவ அமைப்பில் இருக்கின்றன? ஆடு, மாடு முதலிய ஸாது மிருகங்கள், புலி, சிங்கம் மாதிரி துஷ்ட மிருகங்கள் என்று எத்தனை தினுசு? இத்தனை இருக்கும்போது யானை ரூபத்தை ஏன் ஸெலக்ட் பண்ணினாரென்றால் அதற்கு காரணம் அதற்குத்தான் ஏகப்பட்ட சிறப்புக்கள் இருப்பதே.
இது அத்தனைக்கும் சிகரமாக ஒன்று. தாம்தான் எல்லாவற்றுக்கும் மூலம், முதல் என்று தெரிவிக்கும் ரூபமாக ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்த ரூபத்திலேயே எல்லாருடைய முதல் பூஜையையும் பெற வேண்டும் என்று பரமாத்மா நினைத்தார். தம்முடைய ரூபமே அந்த மூலத்தைத் தெரிவிப்பதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். அத்தனை ஸ்ருஷ்டிக்கும் மூலம் என்ன? ‘முதல்’ என்றால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்பதில் வருகிற ஆரம்பம் மட்டுமில்லை. ஆரம்பமும்தான். அதோடுகூட ஒரு தொழில் என்றால் மூலதனமாக, ‘காபிட’லாக இருப்பது என்றும் அர்த்தம். இப்படி மூலமாக, ஆதியாக இரண்டு அர்த்தத்திலும் முதலாக இருப்பது ப்ரணவம்தான். அப்படிப்பட்ட ப்ரணவாகாரமான அமைப்பைக் கொண்டதாக ஸகல ஜீவ வர்க்கத்திலும் இருப்பது வலது பக்கமாகச் சுழித்த தும்பிக்கையுடன் கூடிய யானையின் முகம்தான்! இந்த சிகரமான சிறப்புக்காகவே அவர் கஜானனராக யானைத் தலையுடன் இருக்கிறார்.
‘கஜானன’ என்பதில் ஆனனம் என்றால் முகம். “வக்த்ராஸ்யம் வதநம் துண்டம் ஆநநம் லபனம் முகம்” என்று முகத்துக்கு ‘அமர’த்தில் பல synonym சொல்லியிருக்கிறது. வக்த்ரம், ஆஸ்யம், வதனம், துண்டம், ஆனனம், லபனம், முகம் என்கிற ஒவ்வொன்றும் முகத்தையே குறிக்கும்.
இதைச் சொல்லும்போது, ‘ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக வார்த்தை கிடையாது; முகத்துக்கு உள்ள பெயர்களையேதான் வாய்க்கும் சொல்வது’ என்ற அபிப்ராயம் அவ்வளவு ஸரியில்லை என்று தோன்றுகிறது. ‘வாக்’ ‘வசனம்’ என்றெல்லாம் பேச்சைச் சொல்கிறோம். இதனடியாக ‘வக்தா’ என்று பேசுகிறவனுக்கும், ‘வக்தவ்யம்’ என்று பேச்சுக்கும் வார்த்தைகள் உள்ளன. ஆனபடியால் ‘வக்த்ரம்’ என்பதும் பேச்சுக் கருவியாயிருக்கும் வாயைத் தான் குறிப்பிடும். ‘வதனம்’ என்ற வார்த்தையும் பேசுகிற அவயவமான வாயைக் குறிப்பதே – ‘வத’ என்றால் ‘பேசு’. லபனம் என்பதும் தாதுப்படி வாயைக் குறிப்பதுதான். ‘லப்’ என்றால் பேசுவது. ஆலாபம், ஸல்லாபம், ஆலாபனை முதலான வார்த்தைகளுக்கு அதுதான் ‘ரூட்’. ஆகையால் முகத்தின் பெயர்களேதான் வாய்க்கும் வந்தன என்பது முழு உண்மையில்லை. வாயின் பெயர்களான வக்த்ரம், வதனம் முதலியவையும் முகத்தின் பெயராயிருக்கின்றன. ‘Man is the only talking animal’ என்பதால் வசனேந்திரியமாக இருக்கப்பட்ட வாய்க்குத் தனி ஏற்றம் உண்டு. அந்த வாய் இருப்பது ஸர்வாங்கங்களிலும் ச்ரேஷ்டமான முகம். பார்க்கிற கண், கேட்கிற காது, மோந்து பார்க்கிற மூக்கு, ஸ்பர்ச ஸுகத்துக்கு விசேஷமாக இருக்கப்பட்ட கன்னம் ஆகிய அவயங்களும் அந்த முகத்திலேதான் உள்ளனவென்றாலும், மநுஷ்ய ஜாதியின் பிரத்யேக விசேஷணம் பேச்சு இந்திரியந்தான் என்பதால்தான் வாய், முகம் இரண்டுக்கும் ஒரே வார்த்தைகளை வைத்திருக்கிறது. அதோடு வாய்க்குத்தான் இரண்டு கார்யங்கள். கண், காது முதலியவற்றோடு பஞ்ச ஞானேந்திரியங்களில் ஒன்றாக இருந்துகொண்டு சாப்பாட்டு ருசியை வாய் அறிகிறது. அப்போது வெளியில் உள்ள ‘சுவை’ என்பதை அது அறிகிறது – வெளியிலுள்ள ரூபங்களை கண் அறிவது போலவும் வெளியிலுள்ள சப்தத்தைக் காது அறிவது போலவும்; வெளி வாஸனை, வழ வழ சொர சொரக்களை மூக்கும் சர்மமும் அறிவது போலவும். அறியும் கருவி என்பதால் ஞானேந்திரியம். அதுவே கார்யம் செய்வதான கை, கால் முதலான பஞ்ச கர்மேந்திரியங்களில் ஒன்றாக, வெளி விஷயத்தை அறிவது என்றில்லாமல், தானே ‘இன்டிபென்டென்’டாகச் செயலாற்றிப் பேச்சு என்பதைப் பேசவும் செய்கிறது. இன்னொன்றும் ருசி அறிவது மட்டுமில்லாமல் ஆஹாராதிகளைக் கடித்து, மென்று சாப்பிடுகிற கார்யத்தையும் வாய்தான் செய்கிறது. இத்தனை முக்யம் வாய்க்கு! ‘முக்யம்’ என்றாலே ‘முகத்தின் தன்மை’ என்றுதான் அர்த்தம்! அதனால்தான் முகத்துக்கும் வாய்க்கும் வித்யாஸமில்லாமல் ஒரே பெயர்களைச் சொல்வது.
கஜ ஆனனர் – யானை முகம் படைத்தவர் விக்நேச்வரர்.
எண் சாண் உடம்புக்கு சிரஸே ப்ரதானம். ஒரு மனிதன் அழகு, அல்லது குரூபி என்பது முகத்தை வைத்துத்தான். பிள்ளையாரின் அப்படிப்பட்ட முகம் – அவருடைய சாந்தமான கண், விசிறிக் காது, தும்பிக்கை மூக்கு முதலியவற்றைக் கொண்ட முகம் – யானையினுடையதாக இருக்கிறது.
ஓம்ʼ ஶ்ரீ க³ஜானனாய நம: ॥
OṂ ŚRĪ GAJĀNANĀYA NAMAḤ ॥