16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 8
॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥
|| ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥
8. विनायकः - விநாயக: - VINĀYAKAḤ :-
विः पक्षिरूपो जीवौघः तन्नेतृत्वात् विनायकः ।
विगतो नायको यस्य विनायक इति श्रुतः ।
வி: பக்ஷிரூபோ ஜீவௌக⁴: தன்னேத்ருʼத்வாத் வினாயக: |
விக³தோ நாயகோ யஸ்ய வினாயக இதி ஶ்ருத: |
பறவை போன்ற ஜீவர்களை வழிநடத்துபவர்.
ஜீவனாகிய பறவைக்குச் சிற்றின்பமும், பேரின்பமும் இரு இறக்கைகள். இரு இன்பங்களையும் அளித்துப் பெற்றோர் போல் குரு போல் வழிநடத்துபவர்.
தனக்கு மேற்பட்டுத் தன்மீது ஆளுமை செய்கிற நாயகனற்றவர். அவருக்கு ஈடும் மிக்காரும் இல்லை. விநாயகர் என்ற பெயர் இந்திரனால் அளிக்கப்பட்டது.
விநாயகர்; இரட்டைப் பிள்ளையார் : ( தெய்வத்தின் குரல் )
விக்நராஜோ விநாயக: – ‘விக்நராஜர்’ என்ற பேருக்கு அடுத்தபடி ‘விநாயகர்’ என்று வருகிறது.
‘இரட்டைப் பிள்ளையார்’ எனறு பக்கத்தில் பக்கத்தில் இரண்டு பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்கிற வழக்கம் இருக்கிறது. அநேக ஊர்களில் ‘இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு’ என்று இருக்கும். அங்கே ஒரே ஆலயத்தில் ஒரே சந்நிதியில் இரண்டு பிள்ளையார்கள் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பபார்கள். தனிக் கோவிலாக இல்லாமல் ஈச்வரன் கோவிலிலேயே இரட்டைப் பிள்ளையார் இருப்பதுமுண்டு.
வேறே எந்த ஸ்வாமிக்கும் இப்படி ஜோடி மூர்த்திகள் வைத்து ஆராதிப்பதாகக் காணோம். பிள்ளையாருக்கு மட்டும் இருக்கிறது. ‘இரட்டைப் பிள்ளையார்’ என்றே சொல்வதாகவுமிருக்கிறது.
ஏனிப்படி என்றால் இவர் ஒருத்தர்தான் தாமே ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றும் இரண்டு காரியங்களைப் பண்ணுகிறார். ‘எதிரானது’ என்று சொல்லவில்லை; ‘எதிரானதாகத் தோன்றுகிற’ என்கிறேன். இதற்கு அப்புறம் வருகிறேன். ஆகக்கூடி இவர் செய்கிற இரண்டு கார்யங்களில் ஒன்று மற்றதற்கு நேர் எதிர் மாதிரித் தெரிகிறது. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியாகத்தான் இரட்டைப் பிள்ளையார் என்று வைத்திருப்பது.
அந்த இரண்டு மூர்த்திகளில்தான் ஒருத்தர் விக்நராஜர். மற்றவர் விநாயகர். அடுத்தடுத்து இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் உட்கார்ந்திருக்கிறாற்போலவே இந்தப் பேர்களும் [ஷோடச நாமாவளியில்] அடுத்தடுத்து வருகின்றன – “விக்நராஜோ விநாயக:”
அதென்ன இரண்டு கார்யமென்றால் – ஒன்று விக்னங்களை உண்டு பண்ணுவது; மற்றொன்று விக்னங்களைப் போக்குவது. நேர்மாறாகத் தோன்றும் இரண்டு கார்யங்கள்.
‘விக்நேச்வரர், விக்நராஜர் என்றெல்லாம் சொல்லும்போது விக்னத்தை உண்டாக்குவதில் ஈச்வரர், ராஜா என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஈச்வரனோ, ராஜாவோ எப்படிக் கெட்டதை அடக்கி அழிக்கும் சக்தியோடு இருக்கிறார்களோ அப்படி இவர் விக்னம் என்ற கெட்டதை அழிப்பதாலேயே இப்படி பேர் பெற்றிருக்கிறாரென்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னேன். பொதுவாக ‘விக்நேச்வரர்’ என்று அவரைச் சொல்லி வணங்கும்போது இந்த அர்த்தத்தில், பாவத்தில்தான் செய்ய வேண்டும்.
ஆனால் இரட்டைப் பிள்ளையார்களில் முதல்வராக அவர் விக்நராஜப் பேரில் இருக்கும்போது அவரை விக்னங்களை உண்டாக்குபவர் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையின் நேர் அர்த்தப்படி, [சிரித்து] திருட்டுப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரனாக இருப்பவனைத் ‘திருட்டு ராஜா’ என்கிற மாதிரி, விக்னங்களைப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரர் என்பதாலேயே ‘விக்னராஜா’ என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்புறம் விக்னங்களைப் போக்கும் மூர்த்தியாக அவர் இருக்கும்போதுதான் அவருக்கு ‘விநாயகர்’ என்று பெயர்.
“விக்னங்களைப் பண்ணுகிறாரென்றால், பொல்லாத சாமியா?” என்றால், அதுதானில்லை.
அதனால்தான் விக்னங்களைப் பண்ணுவதையும் போக்குவதையும் நிஜமாகவே எதிரெதிர் என்று சொல்லாமல் ‘எதிர் மாதிரித் தோன்றுகிற’ என்று சொன்னது. இந்த இரண்டு கார்யங்களுக்கும் ஸாரம் அநுக்ரஹம் என்ற ஒன்றேதான். அதுவே இரண்டு ரூபத்தில், விக்னம் பண்ணுவது, விக்னத்தை அழிப்பது எனறு இரண்டாகியிருக்கிறது. அதனால் அடிப்படையில் எதிரெதிர் இல்லை.
“விக்னத்தைப் பண்ணுவதா அநுக்ரஹம்? அதெப்படி?” என்றால்,
எத்தனையோ தப்புக் கர்மா பண்ணி நாமெல்லாம் நிறைய மூட்டை கட்டிக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனாலும் இப்போது ஏதோ கொஞ்சம் ஈச்வராநுக்ரஹத்தினால் கொஞ்சம் பிள்ளையார் பக்தி உண்டாகி, அவரை வேண்டிக்கொண்டு – நாம் ஆரம்பிக்கிற கார்யங்கள் நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்பதற்காக அவரை வேண்டிக் கொண்டு – ஆரம்பிக்கிறோம்.
சரி, இப்படி வேண்டிக் கொண்டுவிட்டோமென்பதற்காக நம் பழம் பாக்கியை அவர் அப்படியே ‘ஓவர்லுக்’ பண்ணி நமக்குக் கார்ய ஸித்தியைத் தந்தால் ஸரியாயிருக்குமா? என்னதான் கருணையினால் விட்டுக் கொடுக்கலாமானாலும் ஒரேயடியாக பூர்வ கர்ம பலனை ‘கான்ஸல்’ பண்ணினால் ஸரியாயிருக்குமா? அப்புறம் பாப பீதி ஜனங்களுக்கு எப்படியிருக்கும்? தர்ம நியாயம் என்பதே ஒன்றுமில்லை என்றுதானே ஆகிவிடும்? “நாம என்ன வேணா பண்ணலாம், பண்ணியிருக்கலாம். இப்போ கொஞ்சம் பிள்ளையார் பூஜை பண்ணிட்டா போறும். அத்தனை தப்பும் அடிபட்டுப் போயிடும்” என்றல்லவா ஆகிவிடும்?
இப்படி ஆக விடாமலிருப்பதற்காகத்தான் அவர் விக்ந ராஜாவாக இருந்து விக்னங்களை உண்டு பண்ணுவது. ‘உண்டு பண்ணுவது’ என்றால் அவராகவே நம்மைக் கஷ்டப்படுத்துவதற்காக அநியாயமாக உண்டு பண்ணுவதில்லை. நாம் பூர்வத்தில் பண்ணியிருப்பதன் விளைவாக நமக்குக் கார்ய ஸித்தி ஏற்படுவதற்கில்லை என்று கர்ம நியாயக் கணக்குப்படியே இருக்கும். ஆகவே அவர் பண்ணுவதாகத் தோன்றும் விக்னத்திற்கு மூலம் பூர்வத்தில் நாம் பண்ணின தப்புதான். அது எப்படியும் நமக்கு அநேக கார்யங்கள் வெற்றிகரமாக நிறைவேறாமல் இடைஞ்சல் பண்ணத்தான் பண்ணும். அது தானாகப் பண்ணினால் எத்தனையோ உத்பாதமாகவே இருக்கும். இடைஞ்சலால் கார்யம் அடியோடு கெட்டுத் தோற்றே போய் நிற்போம். அல்லது அனேக சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி உண்டாக விட்டு [இடமளித்து] அப்புறம் சேர்த்து வைத்து அத்தனையும் நொறுக்கி மண்டையில் ஒரே போடாகப் போட்டுவிடும் – படு தோல்வியை! இப்படி நேராமல், வெள்ளம் அப்படியே நம்மை அடித்துக் கொண்டு போய்விடாமல், வருமுன் காப்பாக அணைபோட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்தை விடுகிறாற்போலவே, விக்நராஜா நம்முடைய கர்ம சேஷத்தால் உண்டாக வேண்டிய இடைஞ்சலை நாம் தாங்கிக் கொள்கிற அளவில் ‘சானலைஸ்’ பண்ணி விடுகிறார். ‘சானலைஸ்’ பண்ணுவது மட்டுமில்லாமல் ஜலத்தையே ஒரளவுக்கு வற்றவும் பண்ணுகிறார்! என்றைக்கோ பெரிசாகப் பழிவாங்க இருக்கற பெரிய விக்னத்தை இப்போதே தன்னுடைய தும்பிச்சுக்கையால் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, அதைக் கருணையால் கொஞ்சம் சிறுக்க வைத்து, பாக்கியையும் ஒரே வீச்சில் காட்டி விடாமல், சின்னச் சின்னதாகப் பண்ணி நாம் தாங்கிக் கொள்ளும்படிப் பண்ணுகிறார். பழைய கர்மா எவ்வளவு சீக்கிரம் தீர்கிறதோ அவ்வளவுக்கு நல்லதுதானே? அது தீர்ந்தால்தானே விமோசனத்திற்கு வழி திறக்கும்? தள்ளிப் போகப் போக நாம் இன்னமும் புதிசாக எத்தனை மூட்டை சேர்த்துக்கொண்டு விடுவோமோ? இப்படி ஆகாமல் விக்னத்தை முன்னதாகவே இழுத்துக் கொண்டு வந்து, நமக்குக் கொடுமையானதாகத் தெரிந்தாலும் வாஸ்தவத்தில் பரம நல்லதே பண்ணுபவர்தான் விக்நராஜா.
விக்னத்தை இழுத்துக்கொண்டு வருபவர் விக்நராஜா. அப்புறம் அதைச் சிறிசு பண்ணி, நாம் கொஞ்சம் அநுபவித்த உடனேயே, போதுமென்று அப்படியே போக்கி விடுபவர் விநாயகர். வியாதியைக் கிளறிவிட்டு ஸ்வஸ்தப்படுத்துவதுண்டல்லவா? அப்படி, கிளறிவிடுபவர்தான் வித்நராஜர். ஸ்வஸ்தப்படுத்துகிறவர் விநாயகர்.
‘விக்ந கர்த்தா’ [இடையூறு செய்பவர்], ‘விக்ந ஹர்த்தா’ [இடையூறை அழிப்பவர்] என்று இரண்டு பேரும் அவருடைய அஷ்டோத்தரத்தில் அடுத்தடுத்து வருவதில், விக்நராஜா முன்னவர், விநாயகர் பின்னவர்.
விநாயகர் என்றால் விசிஷ்டமான, அதாவது விசேஷம் பொருந்திய நாயகர் – சிறப்புப் படைத்த தலைவர். எல்லா ஸ்வாமிகளுமே நாயகர்கள்தான். அவர்கள் வேறே என்வோ ஒரு அஸுர, ராக்ஷஸ சத்ரு செய்ததற்கு எதிராகச் செய்து, அந்தக் கொடுமையை மாற்றி நல்லது பண்ணியிருப்பார்கள். அப்படிப் பண்ணியதால் ‘நல்லதில் முன்னின்று அழைத்துப் போகிறவர்’ என்ற அர்த்தம் கொண்ட ‘நாயகர்’களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர் எப்படி அவர்கள் எல்லோரையும் விட விசேஷம் பொருந்திய ‘வி’நாயகரானார் என்றால் – இவர் வேறு அஸுரர்கள் பண்ணிய கொடுமைகளைப் போக்குவது மாத்திரமில்லாமல், தாமே விக்நராஜாவாக இருந்து உண்டாக்கிய இடைஞ்சல்களையும் போக்குகிறார்! தம்மைத்தாமே விஞ்சிய நாயகராக இருப்பதால்தான் ‘விநாயகர்’ என்ற தனிப் பெருமை பெறுகிறார்.
‘விக்நராஜர்’ என்பது போலவே ‘விக்நவிநாயகர்’ என்றும் சொல்வதுண்டு; விக்ந விநாயக பாத நமஸ்தே.1
விக்நத்தை உண்டு பண்ணுபவருக்கும் விசிஷ்டமான நாயகர் என்று வைத்துக் கொள்ளலாம்.
விக்ந விநாயகர் விக்ந விநாசகரும்தான்! அதாவது விக்னங்களை அடியோடு நாசம் செய்கிறவர். ஸம்ஸ்கிருத ‘ச’ தமிழில் ‘ய’ ஆகிவிடும். ஆகாசம் – ஆகாயம் மாதிரி. இங்கேயோ ஸம்ஸ்கிருதத்திலேயே விக்ந விநாயகர் விக்ந விநாசகராகவும் இருக்கிறார்!2
1 “மூஷிக வாஹன” சுலோகம். ‘ஆனைமுகரும் அகத்தியரும்‘ என்ற உரையில் பார்க்க.
2 விக்னர் என்றாரே விக்னராஜர் என்றும், அவரையும் விநாயகரையும் இரட்டைப் பிள்ளையாராக ‘விக்ன-விநாயகர்கள்’என்று சேர்த்துச் சொல்வதுண்டு என்றும் தெரிகிறது. “இரு கடவுளரான விக்ந-விநாயகர்கள் பிரீதியடையட்டும்” (“பகவந்தௌ விக்ந-விநாயகௌ ப்ரீயாதாம்”) என்று புண்யாஹவாசனச் சடங்கில் வேண்டும் வழக்கமுள்ளதாகவும் தெரிகிறது.
பிரஸித்தமான பெயர் :
ஸுமுகச் – சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: ||
‘விநாயகர்’ என்பது அடுத்த பேர். பிள்ளையாரின் பிரஸித்த நாமாக்களில் ஒன்று விநாயகர். வட தேசத்தைவிட தக்ஷிணத்தில் அதிப்ரஸித்தமான நாமா. ‘பிள்ளையார் சதுர்த்தி’ என்று பேச்சில் சொல்வதையே ‘விநாயக சதுர்த்தி’ எனறுதான் நாம் formal- ஆகக் குறிப்பிடுகிறோம். வடக்கே ‘கணேஷ் சதுர்த்தி’ என்பார்கள். ஸித்தி விநாயகர், வரஸித்தி விநாயகர், ச்வேத விநாயகர் என்றெல்லாம் பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே நம் தக்ஷிண தேசக் கோவில்களில் அவருக்குப் பெயர் சூட்டியிருக்கும். ‘விநாயகர் அகவல்’ என்றே ஒளவையின் பிரஸித்த ஸ்தோத்திரத்திற்குப் பெயர் இருக்கிறது.
வி-நாயகர். நாயகர் என்றால் தலைவர். பல பேருக்கு மேலே அவர்களைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர்.
எல்லா ஜாதியினருக்கும் உயர்வு மனப்பான்மை :
நாயகர் என்று ஒரு ஜாதிப் பெயர் இருக்கிறது.
ஜாதி முறையினால் தாழ்த்தப்பட்டவர்களும், அவர்களைத் தாழ்த்தி வைப்பவர்களும் வேரூன்றி விட்டார்கள் என்ற அபிப்ராயம் இப்போது இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதில் சலுகைகள், ஆதாயங்கள் கிடைக்கின்றன என்பதால் எல்லாரும் அப்படிச் சொல்லிக் கொள்வதாகவும் இருக்கிறது. ஆனால் முன்னாளில் இப்படிக் கொள்வதாகவும் இருக்கிறது! ஆனால் முன்னாளில் இப்படி இல்லை. அந்தந்த ஜாதியாரும் தாங்கள் ஜன ஸமுதாயத்தில் உயர்ந்த இடம் பெற்றிருப்பதாகவே கருதினார்கள். ஜாதிப் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். நாலாம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு ஜாதிக்காரர்களுக்கு முதலியார் என்ற பேர் இருக்கிறது. ஸமூஹத்தில் முதலிடம் பெற்றவர்கள்தான் முதலியார். அதே மாதிரி வடக்கே ‘அகர்வால்’ என்கிறார்கள். அக்ர ஸ்தானம் என்றால் முதல் இடம். அப்படி ஜன ஸமுதாயத்தில் அக்ரமாக இருப்பவர் அகர்வால். பிள்ளை என்றாலும் மதிப்புக்கு உரியவர் என்று அர்த்தம். ரொம்ப உயர்ஜாதித் தேங்காயைப் பிள்ளைத் தேங்காய் என்பது வழக்கம். ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையைப் பார்த்தால் ப்ராம்மணர்களும் முதலி என்றும், பிள்ளை என்றும் சொல்லப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். சைவ ஸம்ப்ரதாயத்தைப் பார்த்தாலும்-ஸம்பந்தர் வேத ப்ராம்மணர், ஸுந்தரர் ஆதிசைவர், அப்பர் வேளாளர்; இந்த மூன்று பேரையும் சேர்ந்து ‘மூவர் முதலிகள்’ என்று சொல்வது மரபு. ‘ராஜ’ என்ற வார்த்தைதான் ராய, ராவ் என்றெல்லாம் ஆயிற்று. தமிழ் தேசத்திலிருக்கிற நாம் ‘ராவ்’ என்றால் மாத்வ பிராம்மணரைத்தான் நினைக்கிறோம். ஆனால் மாத்வர்கள் அதிகமுள்ள கன்னட தேசத்திலும், அதே போல ஆந்திராவிலுள்ள நாலாம் வர்ணத்தவர்களும் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அதுவே வடக்கே ராய், ரே என்றெல்லாம் இருக்கிறது. வைச்யர்களைச் செட்டியார் என்கிறோம். ‘ச்ரேஷ்டி’ என்பதுதான் செட்டி ஆயிற்று. ச்ரேஷ்டமானவர்கள் – உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் – என்று அர்த்தம். ச்ரேஷ்டிதான் வடக்கே ‘ஸேட்’ ஆயிற்று. கன்னட தேசத்தில் அதையே ஷெட்டி என்பார்கள். ‘அவன் உசந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி’ என்ற அபிப்ராயங்களும் போட்டிச் சண்டைகளும் இல்லாமல், யாரானாலும் பாரம்பர்யமாக ஏற்பட்ட தொழிலைச் செய்து ஒரு ஜன ஸமுதாயத்திற்கு வேண்டிய எல்லாவிதமான பணிகளையும் போட்டி பொறாமை இல்லாமல் பண்ணிக் கொடுத்ததோடு அவரவரும் முதல் ஜாதிதான், உயர் ஜாதிதான் என்ற pride-ஓடு நம் ஜனங்கள் இருந்து வந்ததை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன. பல வகுப்புக்காரர்களுக்கிடையில் இருந்து வந்த ஸெளஜன்யமும் இதில் தெரிகிறது. எப்படியென்றால் ஒரு ஜாதிக்காரர்கள் தங்களுக்கு உயர்வாகப் பேர் வைத்துக் கொண்டதை மற்றவர்களும் ஆக்ஷேபிக்காமல், அவர்களுக்கு அந்த pride இருக்கட்டும் என்றே எடுத்துக் கொண்டு, தாங்களும் அவர்களை அப்படித்தான் கூப்பிட்டிருக்கிறார்கள்.
தலைவர் என்ற அர்த்தமுள்ள ‘நாயக’ பதம் எல்லா வர்ணத்தினருக்கும் உரிய பெயராக இருந்து இந்த ஸமத்வத்தை – தற்காலத்தில் சொல்லும் காரிய ஸமத்வத்தை அல்ல; அதைவிட அவசியமான மனோபாவ ஸமத்வத்தை – நன்றாகக் காட்டுகிறது மஹாராஷ்ட்ராவில் ‘நாயக்’ என்று இருப்பவர்களில் பிராம்மணர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர் நாயக வம்சம், மதுரை நாயக வம்சம் என்கிற இடத்தில் நாயகர்கள் ராஜகுலத்தவர்கள். கன்னட தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த நாயக்கர்களும், ஆந்திரத்தில் இந்த ‘நாயக’ தாதுவின் அடியாகவே நாயுடு என்று சொல்லப் படுபவர்களும் நாலாம் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்.
‘நாயக’ என்காமல் ‘நாய’ என்றே சொன்னாலும் போதும். ‘பாலன்’ என்பதையே ‘பாலகன்’ என்றும் சொல்கிற மாதிரி அநேக வார்த்தைகளுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘க’ சேர்ப்பதுண்டு. நாயன் என்றாலும் தலைவர்தான். மலையாளத்தில் நாயர் என்கிறார்கள். அவர்களும் நான்காம் வர்ணம்தான். தமிழ் தேசத்தில் உத்தமமான அடியார்களை ‘நாயனார்’ என்கிறோம். ஒருத்தர் நாயனார், பலபேர் நாயன்மார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் இல்லாத ஜாதியே இல்லை! அறுபத்து மூவரையும் பற்றி ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடிய திருவாரூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கே நயினார் என்றுதான் பேர்.
‘வி’ எனும் அடை :
விநாயகர் என்ற பெயரில் நாயகருக்கு முந்தி ‘வி’ இருக்கிறது. சிவகணத் தலைவரான பிள்ளையார் ‘நாயகர்’ என்ற பேருக்கு ரொம்பவும் பொருத்தமுடையவர் என்று தெரிகிறது. அதற்கு முந்தி ‘வி’ போட்டால் என்ன அர்த்தம்?
ஸம்ஸ்கிருதத்தில் வார்த்தைகளுக்கு முன்னே சேர்க்கிற prefix (முன்னடை) களில் ‘வி’ என்பது ஒன்று. இந்த ‘வி’ யின் விசேஷம் என்னவென்றால் அது பின்னாடி என்ன வார்த்தை சேருகிறதோ அதன் அர்த்தத்தை இரண்டு விதங்களில் மாற்றக்கூடும். ஒன்றுக்கொன்று முழுக்க வித்தியாஸமான இரண்டு விதங்கள்! ‘மலம்’ என்றால் அழுக்கு. ‘வி’ சேர்த்து ‘விமலம்’ என்றால் சுத்தம். இந்த இடத்தில் ‘வி’ என்பது பின்னே வரும் வார்த்தைக்கு ‘ஆப்போஸிட் மீனிங்’ உண்டாக்கும்படிச் செய்கிறதென்று தெரிகிறது. ஆனால் – ‘சுத்த’த்துக்கு ‘வி’ போட்டு ‘விசுத்தம்’ என்று வார்த்தை இருக்கிறது. அதற்கு சுத்தமாக இல்லாதது என்று ஆப்போஸிட் அர்த்தம் பண்ணிக் கொண்டால் தப்பு. இந்த இடத்தில் ‘வி’ என்பது பின்னே வரும் வார்த்தையை எதிர்ப்பதமாகப் பண்ணாது; அதற்கு மேலும் வலிவும் உயர்வுமே கொடுக்கும். ‘விசுத்தம்’ என்றால் பரம சுத்தமானது எனறு அர்த்தம்! விபரீதம் என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். ‘பரீதம்’ என்றால் முறையாகச் சுற்றிக் கொண்டிருப்பது. ‘விபரீதம்’ முறைகெட்டுத் தாறுமாக இருப்பது. இங்கே ‘வி’ எதிர்ப்பதமாக்கிவிடுகிறது. ‘ஜயம்’ – வெற்றி என்றால் ‘விஜயம்’ அதற்கு எதிர்ப்பதமான தோல்வியா என்றால், அப்படி இல்லையல்லவா? விசேஷமான, அதாவது சிறப்புப் பொருந்திய வெற்றியே விஜயம்.
விசேஷம் என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்ளலாம். சேஷம்-விசேஷம். ‘சேஷம்’ என்றால் மீந்துபோனது என்றே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதுவும் ஸரிதான். அதைவிட சிறந்த உள்ளர்த்தமும் உண்டு. மற்றதோடு சேராமல் தன்னுடைய உயர்வினால் அவற்றிடமிருந்து பிரிந்து நிற்பதும் ‘சேஷம்’ தான். ‘சிஷ்டர்’ என்று சான்றோர்களைச் சொல்கிறோமல்லவா? ‘சேஷ’த்திலிருந்துதான் ‘சிஷ்ட’ பதம் வந்தது. ஸமூஹத்தில் சராசரி ஜனங்களில் ஒருவராக இல்லாமல் பிரிந்து உயர்ந்து, [சிரித்து] distinct- ஆக இருந்து distinction பெற்றவர்களே சிஷ்டர்கள். சேஷம் என்பதற்கு ‘தன்னுடைய சிறப்பால் தனிப்பட்டு நிற்பது’ என்ற இந்த அர்த்தத்தைவிட ‘மீந்து போனது’ என்ற அர்த்தமே வியாபகமாக ஆனதால்தான், அந்தச் சிறப்பை வலியுறுத்திக் காட்டுவதற்காக ‘வி’ சேர்த்து விசேஷம் என்பது.
இருபொருளிலும் வி-நாயகர்! :
‘வி’ ப்ளஸ் ‘நாயகர்’ என்னும்போது ‘வி’ என்பது நாயகருக்கு எதிர் அர்த்தம் கொடுக்குமா?அல்லது அதை இன்னும் சிறப்புத் தந்து உசத்தி வைக்குமா?
இரண்டுந்தான்!
அதெப்படி என்று ஆச்சர்யமாயிருக்கலாம், சொல்கிறேன்.
‘தவன்’ என்றால் பதி. ‘மாதவன்’ என்றால் மா என்கிற மஹாலக்ஷ்மியின் பதி. ‘விதவா’ என்றால் பதி இல்லாதவள். அதே போல ‘விநாயகர்’ என்றால் ‘தலைவன் இல்லாதவர்’. எல்லோருக்கும் அவர்தான் தலைவர். அவருக்குமேல் தலைவர் இல்லை. அதனால் தலைவன் இல்லாதவர் வி-நாயகர்.
ஒரு பக்தர் பகவானிடம் போனாராம். “நான்தான் அநாதன் [அநாதை] என்றால் நீயும் அப்படியே இருக்கியே!” என்றாராம். “என்னையா அநாதன் என்கிறாய்?” என்று ஸ்வாமி கேட்டாராம். “ஆமாம். என்னைக் காப்பாற்ற ஒரு நாதன் இல்லாமல் நான் அநாதனாக இருக்கிறேன் என்றால் நீயும் உனக்கு மேல் நாதன் இல்லாததால் அ-நாதனாகத்தானே இருக்கே?” என்றாராம் அந்த பக்தர்.
தம்மிலும் மேலான ஒரு தலைவர் இல்லாதவர் விநாயகர்.
இங்கே ‘வி’ எதிர் அர்த்தம் கொடுக்கிறது.
இதற்கு நேர் மாறாக அதே ‘வி’ சிறப்புக் குறியாகவும் இருக்கிறதல்லவா? அந்த விதத்திலும் விக்நேச்வரர் விநாயகராக இருக்கிறார். அவர் ஸாதாரணமான நாயகர் (தலைவர்) அல்ல. ரொம்பவும் சிறப்புப் பொருந்திய, விசேஷமான விசிஷ்டமான நாயகர் அதனால் விநாயகர்.
தமக்கு மேல் நாயகன் இல்லாததாலும் வி-நாயகர். தாமே மிக மேலான நாயகராக இருப்பதாலும் வி-நாயகர். இரண்டு அர்த்தத்திலும் பேர்ப் பொருத்தமுள்ளவராக இருக்கிறார்.
‘அமர’த்தில் பிள்ளையார்ப் பெயர்கள் :
அமர[கோச]த்தில் விக்நேச்வரரின் பெயர்களைச் சொல்லும்போது ‘விநாயக’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறது. [மனத்திற்குள் அந்தப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, விரல் விட்டு எண்ணியபடி] நம்முடைய சாஸ்திரங்களில் பதினாறு நாமாக்களை முக்யமாகச் சொல்லியிருக்கிறதென்றால், ஜைனனான அமரஸிம்ஹன் எழுதிய அந்தக் கோசத்தில் இதில் பேர் பாதி – எட்டுப் பெயர்கள் – சொல்லியிருக்கிறது.
விநாயகோ, விக்நராஜ, த்வைமாதுர, கணாதிபா: |
அப்-யேகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜாநநா: ||
இதிலே விநாயக, விக்னராஜ, ஏகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜானன என்ற ஆறு பெயர்கள் நம்முடைய ஷோடசநாமாவிலும் இருக்கின்றன. ‘கணாதிப’ என்ற பெயர் ‘கணாத்யக்ஷ’ என்பதாக ஷோடச நாமாவில் இருக்கிறது. இதில் இல்லாமல் ‘அமர’த்தில் இருக்கும் ஒரே பெயர் ‘த்வைமாதுர’ என்பது. அப்படியென்றால் ‘இரண்டு தாயார்களை உடையவர்’. அம்பாள் ஒரு தாயார். கங்கை இன்னொரு தாயார். கங்கையிலுள்ள சரவணப் பொய்கையைச் சேர்ந்தே சிவநேத்ரத்தின் அக்னிப் பொறி ஸுப்ரஹ்மண்ய ஸ்வரூபமாக உத்பவித்ததால் ஸுப்ரஹ்மண்யருக்கு கங்கை நேர் தாயார் மாதிரி. அதனால்தான் அவரை ‘காங்கேயன்’ என்பது. பிள்ளையாருக்கு அத்தனை நேர் ஸம்பந்தமில்லாவிட்டாலும், அவருடைய தகப்பனாருடைய சிரஸில் கங்கை பத்னி ஸ்தானத்திலிருப்பதால், ஒளபசாரிகமாக [உபசாரமாக] அவளையும் ஒரு தாயாராகச் சொல்வது.
விநாயக நாமா ‘அமர’த்தில் பிள்ளையாரின் முதல் பெயராயிருக்கிறதென்று சொல்ல வந்தேன். ஒரு நிகண்டுவில் [அகராதியில்] ஒரு தெய்வத்தைப் பற்றிய பெயர் வரிசையில் முதலாக வருவதென்றால் அது முக்கியத்வம் வாய்ந்த நாமா என்று அர்த்தம்.
ॐ श्री विनायकाय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ விநாயகாய நம:॥
OṂ ŚRĪ VINĀYAKĀYA NAMAḤ॥
No comments:
Post a Comment